காந்தாரா இரண்டாம் பாகத்தில் மலையாள நடிகர் மோகன்லால்
காந்தாரா இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லால் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது!
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறைந்த செலவில் எடுக்கப்பட்டு கன்னடத்தில் வரவேற்பை பெற்ற இப்படம் அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. அதன் மூலம் இப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது.
காந்தாரா வெற்றிக்கு பிறகு, காந்தாரா ஏ லெஜண்ட் (சாப்டர்1) என்ற பெயரில் இரண்டாவது பாகம் உருவாக உள்ளது. இரண்டாம் பாகத்திற்கு 200 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே இரண்டாம் பாகத்திற்கான முதல் தோற்ற வீடியோவை படக்குழு வெளியிட்டு எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்ததோடு இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் என 7 மொழிகளில் தயாராக உள்ளதாகவும் அறிவித்தது.
மேலும் இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் முதல் மங்களூரில் காந்தாரா இரண்டாம் பாகத்திற்கான பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. காந்தாரா இரண்டாம் பாகத்தில் 1970,80 காலகட்டத்தில் நடைபெறுவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்புகள் மே மூன்றாவது வாரத்தில் தொடங்க உள்ளது. அதோடு காந்தாரா 2 மற்றும் 3 என இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் காந்தாராவின் அடுத்த பாகத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் மோகன்லாலை ரிஷப் ஷெட்டி சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.