திருவள்ளூர் அருகே அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர் நெஞ்சு வலி ஏற்பட்டு வகுப்பறையிலே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த சென்றாயன்பாளையம் கிராமத்தில் செயல்படும் TELC அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பாண்டூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சசிகுமார் என்ற ஜெயச்செல்வன் அப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அவர் இன்றைய தினம் வழக்கமாக பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் கற்பித்த பின்னர் மதிய உணவு இடைவேளையின் போது உணவு அருந்த வகுப்பறையிலே அமர்ந்து உணவு அருந்த முயற்சித்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி வகுப்பறையில் விழுந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து சக ஆசிரியர் தகவல் அடிப்படையில் ஊர் பொதுமக்கள் அவரை திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வர வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக கூறி உள்ளனர்
அதைத் தொடர்ந்து அவருடைய உடல் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே நெஞ்சு வலி ஏற்பட்டு வகுப்பறையிலே ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.