சென்னை அண்ணாநகர் டவர் பார்க் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த காவலரால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் ஆணையர் உடனடியாக இங்கு வரவேண்டும் என காவலர் கூச்சலிட்டதால் சுமார் இரண்டரை மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
சென்னை அண்ணாநகர் டவர் பார்க்கில் திடீரென காக்கி சட்டை அணிந்த காவலர் ஒருவர் டவரின் உச்சிமீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அங்குள்ள பொதுமக்கள் அச்சமடைந்து உடனடியாக தீயணைப்புத் துறையினர் மற்றும் அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் அண்ணாநகர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது அந்த காவலர் காவல் ஆணையர் எனது கோரிக்கையை கேட்க இங்கு உடனடியாக வரவேண்டும் எனவும் என்னை மீட்கும் பணியில் ஈடுபட்டால் மேலிருந்து குதித்து விடுவேன் என தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு நிலவியது. பின்னர் சுமார் இரண்டரை மணி நேரமாக அந்த காவலரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் அவரை சமாதானம் செய்து கீழே இறக்கி வந்தனர்.
திருக்கோவிலூர் : தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி
இதனையடுத்து தற்கொலை மிரட்டல் விடுத்த அந்த காவலரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் பரீக் பாட்ஷா(25) என்பதும் மெட்ரோ ஸ்டேஷனில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என போலீசார் விசாரணை நடத்திய போது அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்து வந்தார். பல மணி நேரமாக அந்த காவலர் வாயை திறக்காததால் போலீசார் மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். காவலர் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் பணிச்சுமையா அல்லது வேறு ஏதாவது காரணமா? என அண்ணா நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.