சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்ட, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீர் இயந்திர கோளாறு காரணமாக, விமானம் புறப்படாமல் நிறுத்தி வைப்பு. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் தாமதமாக இன்று பிற்பகல், புறப்பட்டு செல்லும் என்று அறிவிப்பு.
விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டு, விமானத்தில் இருந்த, 168 பயணிகள் உட்பட 180 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
சென்னையிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் செல்லும், மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு 12:30 மணிக்கு, சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட தயாரானது. விமானத்தில் 168 பயணிகள் 12 விமான ஊழியர்கள் மொத்தம் 180 பேர் ஏறி அமர்ந்தனர்.
விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்குவதற்கு முன்னதாக, விமானத்தின் இயந்திரங்களை விமானி சரிபார்த்த போது, விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து இந்த நிலையில் விமானத்தை இயக்கினால் ஆபத்து என்பது உணர்ந்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்தார்.
இதை அடுத்து விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, இந்திரங்களை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும், விமானத்தின் இயந்திரங்களை சரி செய்ய முடியவில்லை. இதனால் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களுக்கு, சொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், இன்று பிற்பகல் சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து கோலாலம்பூர் செல்ல வந்திருந்த 168 பயணிகள் சென்னையில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
அதே நேரத்தில் விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால், அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டு, 180 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.