நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2 ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அந்த வகையில் இவர் விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு இவர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் உருவாகி இருந்த திருச்சிற்றம்பலம் எனும் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பெயர் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றுள்ளார். நேற்று (அக்டோபர் 8) புதுடெல்லியில் 70ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் குடியரசு தலைவர் விருதுகளை வழங்கி கௌரவித்தார். அப்போது நித்யா மேனன் மிகுந்த மகிழ்ச்சியுடன் விருதினைப் பெற்றார்.
மேலும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நித்யாமேனன், தான் அடுத்தது தனுஷுடன் இணைந்து பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார். அதன்படி தனுஷ் தற்போது இயக்கி நடித்துவரும் இட்லிகடை திரைப்படத்தில் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் நித்யா மேனனின் கதாபாத்திரம் வலுவான கதாபாத்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.